Websites Links

Friday, November 1, 2013

குறைந்தபட்ச ஊதியம், பிஎப், பென்ஷன்... எதுவும் கிடையாது 2.50 லட்சம் தபால் ஊழியர்களின் கண்ணீர் கதை



திருவில்லிபுத்தூர் : ஊதிய உயர்வு அறிவிப்பு வெளியாக ஓரிரு நாட்கள் தாமதம் ஆனாலும் கூட போர்க்கொடி தூக்கி, போராட்டக் குரல் எழுப்புகிற அமைப்புகள் தெரிந்து கொள்ளவேண்டிய சேதி இது. பணியில் சேர்கிற முதல் மாதத்தில் வாங்குகிற அந்த சொற்ப ஊதியத்தில், அதற்குப் பிறகு பெரிய அளவில் உயர்வேதும் இருக்காது. பணிகாலத்தின் கடைசி மாதம் வரை அதையே வாங்கி கஷ்ட ஜீவனம் நடத்தி விட்டு, ஓய்வுக்குப் பிறகு பென்ஷன், பிஎப் என எந்தச் சலுகையும் இன்றி வீட்டுக்குச் செல்கிற பரிதாபத்துக்குரியவர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் ‘ஜிடிஎஸ்’எனப்படுகிற கிராமப்புற தபால் ஊழியர்கள்.


கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கும் தகவல் தொடர்பு சேவையைக் கொண்டு போய்ச் சேர்க்கும் எண்ணத்துடன் நாடு முழுவதும் பல்லாயிரம் கிராமங்களில் கிளை அஞ்சலகங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் கிளை அஞ்சலக அதிகாரி, தபால்காரர்கள் மற்றும் பேக்கர்ஸ் (தபால்களை சேகரித்து வருவது, முத்திரையிடுவது, பைகளில் வைத்து பார்சல் கட்டிச் செல்வது உள்ளிட்ட பணிகளைச் செய்பவர்) என மூன்று பிரிவு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். 


இவர்களுக்கான ஊதியத்தை தபால்துறைதான் வழங்குகின்றது. மத்திய அரசுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், சம்பளம் வாங்கினாலும் கூட, இவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் இல்லை என்பது புரிந்து கொள்ளமுடியாத விநோதம். தனியார் துறை ஊழியர்களுக்குக் கிடைக்கிற சம்பளமோ, சலுகைகளோ இவர்களுக்குக் கிடையாது. அரசுத்துறை ஊழியர்களுக்கான உரிமைகள், பாதுகாப்பும் இல்லை. மொத்தத்தில், ‘திரிசங்கு சொர்க்க’ நிலையில் தத்தளிக்கும் இவர்கள் நிலைமை பரிதாபத்துக்குரியது.


தபால்துறையைப் பொருத்தவரை, ஜிடிஎஸ் பணியாளர்கள் என இவர்கள் ‘நாமகரணம்’ சூட்டப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இவர்களும் தட்டாத கதவுகள் இல்லை; பார்க்காத அமைச்சர்கள் இல்லை. இன்றுவரை எந்த விடிவும் இல்லை. அகில இந்திய தபால் அலுவலர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கட்ராமனிடம் பேசியபோது, இந்த அவலம் குறித்து விரிவாகவே பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டி:


கிராமின் தாக் சேவக் (சுருக்கமாக, ஜிடிஎஸ்) என இந்தியில் அழைக்கப்படும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் நாடு முழுவதும் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் பணிபுரிகிறார்கள். பணியில் சேரும்போது என்ன ஊதியம் வாங்குகிறாரோ... அதுதான் பெரும்பாலும் பணி ஓய்வு வரை. இடையில் சிறு, சிறு ஊதிய உயர்வுகள் இருந்தாலும் கூட, அது பெரிய அளவில் வருவாயில் மாற்றத்தை தந்து விடாது.


மாதம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரத்துக்குள் ஊதியம் வாங்கும் இவர்களுக்கு ஜிபிஎப், பென்ஷன், மெடிக்கல் அலவன்ஸ் என அரசுத்துறை ஊழியர்களுக்கு உள்ள எந்த சலுகையும் இல்லை. இந்த அவலநிலை குறித்து 1977ல் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எங்களை ‘சிவில் சர்வன்ட்‘ என, அதாவது அரசு ஊழியர்களே என்று திட்டவட்டமாக தீர்ப்பளித்தது. ஆனால், இதை தபால்துறை ஏற்றுக் கொள்ளவில்லை.


இதன் பிறகு, 1996ல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனது முந்தைய தீர்ப்பை திட்டவட்டமாக மீண்டும் உறுதி செய்தது. ஆனாலும் பலன் இல்லை. இதையடுத்து, ஜிடிஎஸ் ஊழியர்களின் நிலைமை குறித்து முடிவு செய்வதற்காக தல்வார் கமிட்டி அமைக்கப்பட்டது. ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு பென்ஷன், போனஸ் மற்றும் இலாகா ஊழியர்களாக்குவது என அனைத்து உரிமைகளையும் அங்கீகரித்து தல்வார் கமிட்டி 1997ல் பரிந்துரைத்தது.


இந்த பரிந்துரைகள் இன்றுவரை அமல்படுத்தப்படவில்லை. அவர்களை நிரந்தரப்படுத்தவேண்டும். இதற்கு, அனைத்து அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்கவேண்டும். கடந்த காலத்தின் கசப்பான அனுபவங்கள், கண்களில் தெரிந்தாலும், அதையும் மீறி நம்பிக்கைக் கீற்றுகள் மின்ன... அஞ்சல் ஊழியர்களின் அவலநிலை குறித்து தனது கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்கிறார் வெங்கட்ராமன்.


நிலைமை மாறுமா?


ஜிடிஎஸ் ஊழியர்கள் எட்டு மணிநேரம் பணிபுரிந்தாலும் கூட, ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் பணிபுரிந்ததாகவே கணக்கிடப்பட்டு இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. சம்பளமாவது திருப்திகரமாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. ‘நாங்கள் வாங்குகிற ஊதியத்தை வெளியில் சொன்னால், வெட்கக்கேடு‘ என்கிறார்கள். உண்மைதான். 


கிளை அஞ்சலக அதிகாரியின் மாத ஊதியம் (மூன்று மணிநேர கணக்குப்படி) ரூ.2 ஆயிரத்து 745. பணிச்சுமை அதிகம் உள்ள கிளைகளில், ஐந்து மணிநேர பணிநேரம் சில சமயம் கணக்கிடப்படுவதுண்டு. அப்படி ஐந்து மணிநேர பணியாக கணக்கிடப்பட்டால் மாதம் ரூ.4 ஆயிரத்து 575 சம்பளம். இவர்களுக்கு அடுத்தபடியாக தபால்காரர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 665, ஜிடிஎஸ் பேக்கர்ஸ்க்கு ரூ.2 ஆயிரத்து 285. எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ‘மத்திய அரசு சம்பளம்?’

Source : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=66619

No comments:

Post a Comment